கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுலா வேன் ஒன்று விபத்தில் சிக்கியது. அது தொடர்பாக அந்த வேன் ஓட்டுநர் ஏழு நாள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வேனில் எட்டு இந்தியச் சுற்றுப்பயணிகள் இருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 வயது ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டது நிரூபணமாகியுள்ளது. ஓட்டுநர் மே 11ஆம் தேதி வரை விசாரணையில் இருப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (மே 4) காலை 10.30 மணிவாக்கில் தெற்கு நோக்கி கோலாலம்பூரிலிருந்து மலாக்கா செல்லும் வடக்கு-தெற்கு விரைச்சாலையின் கேஎம் 212 பகுதியில் விபத்து நிகழ்ந்தது.
சுற்றுலாப் பயணிகள் கோலாலம்பூரிலிருந்து மலாக்கா செல்லும் வழியில் விபத்தில் சிக்கினர்.
52 வயது ஆடவர், ஒன்பது, 13 வயதுகளில் உள்ள சிறுவர்கள் இருவர் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஓட்டுநருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. விசாரணை தொடர்கிறது.

