புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தலமான புக்கெட் தீவுக்குச் செல்வோர் ஜெல்லிமீன்களிடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
புக்கெட் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டா கடற்கரையில் தங்களை ஜெல்லிமீன்கள் கடித்துவிட்டதாக 30க்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தோங், நய் யாங், சுரின் உள்ளிட்ட புக்கெட்டின் 20க்கும் மேற்பட்ட கடற்கரைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வை அதிகரித்து, முதலுதவி குறித்த தகவல்களைத் தெரியப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெல்லிமீன் கடித்தோருக்கு உடனடியாக உதவ கையில் வினிகர் புட்டியுடன் உயிர்காப்புப் பணியாளர்கள் கடற்கரைப் பகுதிகளில் உலா வருகின்றனர்.
ஜெல்லிமீன் கடித்த பகுதியில் வினிகரைக் கொட்டி, குறைந்தது 30 நொடிகள் பொறுத்திருந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், ஜெல்லிமீன் கடித்த இடத்தில் தண்ணீரை அல்லது மதுவை ஊற்றினால் அது வலியை மேலும் கூட்டிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.