குறைந்தபட்ச நிதி நிலையை உறுதி செய்யாத காரணத்தால் ‘வெகன்சா குளோபல் டிராவல்ஸ்’ (விஜிடி) என்ற சுற்றுலாச் சேவை நிறுவனத்தைச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இடைநீக்கம் செய்ததாக திங்கட்கிழமை (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதன்படி அந்நிறுவனம் சுற்றுலாக்களுக்கான புதிய முன்பதிவுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது, ஆனால் இடைநீக்கத்துக்கு முன்பாக அதனுடன் பயணிகள் செய்துகொண்ட திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
பயண முகவர் உரிமம் பெறுவதற்கு ஒரு நிறுவனம் அதன் மொத்த நிதியின் மதிப்பில் குறைந்தபட்சம் $100,000 இருப்பதை அனைத்து நேரங்களிலும் உறுதி செய்ய வேண்டும்.
விஜிடி நிறுவனத்தின் இடைநீக்க விதிகளின்படி, அது அந்த நிதி இருப்பு உள்ளதற்கான ஆவணங்களைக் கழகத்திடம் வழங்கவேண்டும். அதுவரையில் அல்லது ஆறு மாதங்களுக்கு எது முன்னரோ அதுவரை நீக்கம் நடப்பில் இருக்கும். இவ்விவரங்களை கழகம் அறிக்கையில் விளக்கியது.
இடைநீக்கம் முடிந்தும் நிறுவனம் நிதி இருப்பை உறுதிப்படுத்தாவிட்டால் அதன் உரிமம் நிரந்தரமாக மீட்டுக்கொள்ளப்படும் (ரத்தாகும்) எனவும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எச்சரித்தது.
முகவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை
சிங்கப்பூரில் சுற்றுலாச் சேவைகளை வழங்கும் துறையின் தரத்தைப் பாதுகாப்பதில் கழகம் அதிக கவனம் செலுத்துகிறது. முறை தவறும் முகவர்களின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கழகம் தயங்காது எனவும் அது அறிக்கையில் நினைவூட்டியது.

