வாஷிங்டன்: அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த தற்காலிக வரிகள் இவ்வாரம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
அந்தப் புதிய வரி 10க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க வர்த்தகத் தூதர் ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
கொத்தடிமை ஊழியத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் 60 வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்டு புதிய வரிகளை டிரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ளது.
சட்டரீதியான பின்னடைவுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபரின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் முயன்று வரும் வேளையில் புதிய வரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிஎன்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய கிரீரிடம் புதிய வரிகள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “கூடிய விரைவில் சில நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம்,” என்றார். அதேவேளை, புதிய வரிகள் எப்போது வரும் என்பது குறித்து அவர் எதனையும் குறிப்பிடவில்லை.
டிரம்ப் விதித்த பல்வேறு வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்ததைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு 10 விழுக்காட்டு வரியை அவர் விதித்தார். அந்தத் தற்காலிக வரிகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முடிவுக்கு வருகின்றன.
அதற்குப் பதிலாக டிரம்ப் நிர்வாகம் விதிக்க இருக்கும் வரிகள் 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வரிகளைத் தனது வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த டிரம்ப் மீண்டும் முயன்று வருவதாகக் கூறப்படும் வேளையில், உலக நாடுகள் அதற்குப் பதிலடி கொடுக்கும் சூழலும் அதன் மூலம் அரசதந்திர ரீதியிலான பதற்றங்களும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு மருந்துகள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருள்கள் மீது 100 விழுக்காட்டு வரி விதிக்க இருப்பதாகவும் அது 2028 ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) அறிவித்தார்.

