வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை புதன்கிழமை (பிப்ரவரி 12) அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சந்திப்பு குறித்து செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற பிறகு புட்டினுடன் டிரம்ப் முதல்முறையாகத் தொடர்புகொண்டார். புட்டினுடன் நீண்டநேரம் பேசியதாகவும் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.
ரஷ்யா-உக்ரேன் போர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதன் வாயிலாக அதிலிருந்து உக்ரேன் ஒதுக்கப்படவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
“நானும் அதிபர் புட்டினும் சவூதி அரேபியாவில் முதல்முறையாகச் சந்திக்கக்கூடும்,” என்று வெள்ளை மாளிகையில் கூடியிருந்து செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இவ்வாரம் நிகழ்ந்த ரஷ்ய-அமெரிக்க கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான், தமக்கும் அதிபர் புட்டினுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.