காத்மாண்டு: நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது திங்கட்கிழமை (மே 11) தீ ஏற்பட்டது.
அந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானநிலையம் ஒரு மணி நேரம் மூடப்பட்டது என்று நேப்பாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் A330 ரக விமானத்தின் வலதுபுற பின் சக்கரத்தில் தீ பற்றியது.
உடனடியாக விமானத்தில் இருந்த 277 பயணிகளும் 11 ஊழியர்களும் அவசர வழிகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலைய அதிகாரிகள் தீயை விரைந்து அணைத்தனர். பின்னர், விமானம் டாக்ஸிவே பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

