சோல்: தென் கொரியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நக அழகு நிலையத்தை ஏமாற்ற முயன்ற துருக்கியப் பெண்ணைக் காவல்துறை கைது செய்துள்ளது.
விரல்களில் ரத்தக் காயம் ஏற்பட்டது போன்ற போலிப் படங்களை ‘ஏஐ’ மூலம் உருவாக்கியதுடன், ‘சாட்ஜிபிடி’ உதவியுடன் போலி மருத்துவச் சான்றிதழ்களைத் தயாரித்தும் அவர் மோசடியில் ஈடுபட்டார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறி 400,000 வோன் (கிட்டத்தட்ட 345 சிங்கப்பூர் வெள்ளி) இழப்பீடு கோரிய, துருக்கியைச் சேர்ந்த அந்தப் பெண், மனிதாபிமான அடிப்படையிலான தற்காலிக விசாவில் தங்கியிருப்பவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தனது வாழ்வாதாரச் செலவுகளுக்காகவே இக்குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
வணிகத் தடையும் மோசடியும் புரிந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (மார்ச் 12) காவல்துறை கூறியது. விசாரணையில் மாதுக்கு வேறு யாரும் உதவவில்லை என்பதைக் காவல்துறை உறுதிசெய்தது.

