கிரேக்கத்தில் நடுவானில் விபத்து: தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மோதி இருவர் உயிரிழப்பு

கிரேக்கத்தில் நடுவானில் விபத்து: தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மோதி இருவர் உயிரிழப்பு

1 mins read
f7de0465-7169-4d6c-8983-7a79638212fd
கிரேக்கத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

எதன்ஸ்: கிரேக்கத் தலைநகர் ஏதென்சுக்கு மேற்கில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்கத் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘பெல்’ வகையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களில், ஒன்று மற்றொரு ஹெலிகாப்டரின் இறக்கையில் மோதியதில் தீப்பிடித்துப் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

மற்றொரு ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த பிரிட்டிஷ் விமானியும் கிரேக்க அதிகாரியும் காயங்களுடன் மீட்கப்பட்டு உயிர்தப்பினர்.

இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிரேக்கத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தபோது நிகழ்ந்த இந்தச் சம்பவத்துக்கு கிரேக்கப் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோதாக்கிஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாரத் தொடக்கத்தில் பிரான்சிலும் ஸ்பெயினிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. அங்குள்ள காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறிய ஏறத்தாழ 300,000 பேர் வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கிரேக்கம்காட்டுத் தீஹெலிகாப்டர்விபத்துமரணம்

தொடர்புடைய செய்திகள்