குப்பை கொட்டுவதற்கு எதிரான புதிய சட்டத்தின்கீழ் வெளிநாட்டினர் இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
8e53259b-e2e7-4951-8528-a98fa5149fa5
அனிதா லுக்மான் (வலது) மற்றும் சுல்தான் முகமது (பின்புறம், நடுவில்) ஆகியோர் ஜனவரி 23ஆம் தேதி அன்று ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தனர். - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியாவில் பொது இடங்களில் குப்பை போட்டதாக அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதல் இரண்டு நபர்கள் வெளிநாட்டினர் ஆவர்.

பங்ளாதேஷைச் சேர்ந்த 28 வயது சுல்தான் முகமது என்ற ஆடவரும், 49 வயது இந்தோனீசியாவைச் சேர்ந்த 49 வயது அனிதா லுக்மான் என்ற மாதும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒரு தற்காலிக ஊழியரான அனிதா, திடக்கழிவு தொட்டியில் போடாமல், நடைபாதையில் சிகரெட் துண்டையும் பான பாட்டிலையும் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஜோகூர் பாருவில் உள்ள ஸ்டுலாங் லாவோட்டில் உள்ள ஜாலான் இப்ராஹிம் சுல்தான் என்ற இடத்தில் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 12.41 மணியளவில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.

எந்த வழக்கறிஞரும் அனிதாவைப் பிரதிநிதிக்கவில்லை. தான் ஓர் ஒற்றைத் தாயார் என்றும் எட்டு மற்றும் 15 வயதுகளில் உள்ள இரண்டு பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் கூறி, குறைந்தபட்ச தண்டனையை விதிக்குமாறு நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.

“நான் என் தோழிக்கு தற்காலிக வேலைகள் செய்து உதவுகிறேன். நான் போதுமான பணத்தை வீட்டிற்கு அனுப்பாவிட்டால் என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்,” என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.

திடக்கழிவு, பொதுச் சுத்திகரிப்பு மேலாண்மைக் கழகத்தின் வழக்கறிஞர் சித்தி அடோரா ரஹ்திமான், பொது இடங்களில் குப்பை போடுவது குறித்து சித்திக்கு விதிக்கப்படும் தண்டனை இதர பொதுமக்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கூறினார்.

15 நாள்கள் சிறைத்தண்டனை, தவறினால் அனிதாவுக்கு RM500 அபராதம் செலுத்தவும், ஆறு மணிநேரம் சமூக சேவை செய்யவும் அமர்வு நீதிபதி நோர் அசியாட்டி ஜாஃபர் உத்தரவிட்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வரை சமூக சேவை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர் அவ்வாறு செய்யத் தவறினால் RM2,000 முதல் RM10,000 வரை அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியது.

குப்பை போட்ட மற்றொரு சம்பவம் தொடர்பில், தொழிற்சாலை ஊழியர் சுல்தான் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 1.27 மணியளவில் அதே பகுதியில் அவர் அந்தக் குற்றத்தைப் புரிந்தார்.

இருப்பினும், குற்றச்சாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளாததால், அவர் ஒரு பங்ளாதேஷி மொழிபெயர்ப்பாளரைக் கோரினார்.

நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பங்ளாதேஷி மொழிபெயர்ப்பாளருடன் ஜனவரி 28ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டது என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்