இத்தாலியின் பெர்காமோ வட்டாரத்தில் உள்ள கோவோ பகுதியில் இந்திய ஆடவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை), கோவோவில் உள்ள ஒரு தொழிற்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள சீக்கியக் கோயிலான மாதா சாஹிப் கவுர் ஜி வாசலில் அத்தாக்குதல் நடந்தது.
வைசாகி திருவிழா கொண்டாட்டத்திற்காகக் கூடியிருந்த அவர்கள், வழிபாட்டுத் தலத்திலிருந்து வெளியேறியபோது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் 48 வயது ரகிந்தர் சிங், 48 வயது குர்மித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் 10 முறை துப்பாக்கியால் சுட்டபின்னர் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலையை நடத்தியவரும் ஒரு இந்தியர்தான் எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இத்தாலியக் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

