டொரோண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் கடைகள், உணவகங்கள் நிறைந்த பரபரப்பான பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை டொராண்டோ காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சனிக்கிழமை (ஜூலை 11) நடந்த அச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர், மூவர் காயமடைந்தனர். அப்பகுதியில் புகழ்பெற்ற 'சல்சா' நடன விழா நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
குண்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஐவரில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக டொராண்டோ காவல்துறை உறுதிப்படுத்தியது.
இந்த அறிவற்ற வன்முறைச் செயல் பேரதிர்ச்சியையும் மனவேதனையையும் அளித்துள்ளதாக ஒன்டாரியோ மாநில முதல்வர் டக் ஃபோர்டு, சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக கனடாவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜூன் மாத இறுதியில் மாண்ட்ரியல் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டனர். பிப்ரவரியில் டம்பளர் ரிட்ஜ் நகரில் நடந்த பள்ளித் துப்பாக்கிச்சூட்டில் எண்மர் உயிரிழந்தனர்.

