பாரிஸ்: பிரான்சில் இடியுடன் வீசிய புயலில் சிக்கி இருவர் மாண்டனர்.
புயல்காற்றின் காரணமாக 53,000 குடும்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மின்சாரமின்றித் தவிப்பதாக பிரெஞ்சு ஊடகங்களும் உள்ளூர் மின்விநியோக நிறுவனமான எனெடிசும் தெரிவித்தன.
மத்திய பிரான்சில், ஹாட்-வியென் பகுதியில் உள்ள செயின்ட்-விக்டர்னியன் என்ற இடத்தில் வியாழக்கிழமை மாலை, மரம் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கிழக்கே உள்ள டொலோமியூ பகுதியில், மின்னல் தாக்கியதால் தீப்பிடித்த பட்டறையில் ஒருவர் உடல் கருகி மாண்டுகிடக்கக் காணப்பட்டார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரான்சில் 53,000 குடும்பங்கள் மின்சாரமின்றி தவிப்பதாக மின்விநியோக நிறுவனமான எனெடிஸ் கூறியது. இந்த மின்தடை முக்கியமாகத் தென்கிழக்கில் உள்ள ஓவர்ன் ரோன்-ஆல்ப்ஸ் பகுதியையும் தென்மேற்கில் உள்ள நூவெல் அக்வட்டைன் பகுதியையும் பாதித்துள்ளதாக அது தெரிவித்தது.
மேசிஃப் சென்ட்ரல் முதல் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வரையிலான பகுதிகளில் பலத்த காற்றுடன் பெரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையமான மெட்டியோ-பிரான்ஸ் முன்னதாக எச்சரித்திருந்தது.
பின்னர் வெள்ளிக்கிழமை, நாட்டின் தென்கிழக்கே பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன்கூடிய புயலுக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.


