கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் சேராஸ் என்ற பகுதியில் உள்ள தாமான் தெய்ன்டன் வியூ விடுதியில் இரண்டு சிங்கப்பூரர்கள் மாண்ட நிலையில் வெள்ளிக்கிழமை (மே 16) கண்டெடுக்கப்பட்டனர்.
சேராஸ் வட்டாரக் காவல்துறைத் தலைவர், மாண்டோரின் சடலங்களில் எந்த வெளிக்காயமும் இல்லை என்று அதிகாரிகள் விசாரணையில் புலப்பட்டதைப் பகிர்ந்துகொண்டார். மாண்ட இருவரும் முழுமையாக ஆடை அணிந்திருந்தனர் என்றும் கொலை முயற்சிக்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஜாலான் நட்சத்திரம் என்ற இடத்தில் அமைந்துள்ள விடுதி அறையில் 43 வயது ஆடவரும் 33 வயது பெண்ணும் சுயநினைவின்றி காணப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிக்கு நேற்று பிற்பகல் 12.53 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.
அச்சமயத்தில் ஏற்கெனவே அழுகிக்கொண்டிருந்த சடலங்களிலிருந்து துர்நாற்றம் வந்ததை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
“கூடுதல் சோதனைகள் மூலம் நீல நிற பிளாஸ்டிக் குப்பைப் பைகளால் குளிரூட்டும் சாதனம் சுற்றப்பட்டிருந்ததோடு சன்னல்களும் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது,” என்று காவல்துறை தலைவர் கூறினார்.
பார்பக்கியூ கலனில் எரிந்த கரிக்கட்டைகள் இருந்ததும் கெட்டமைன் என்று சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் அறையிலிருந்து தட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
விடுதியின் ஊழியர் காலை சுமார் 11 மணிஅளவில் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்ததையும் காலணிகள் வெளியில் இருந்ததையும் கண்டதாகச் சொன்னார். பல முறை அறை கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் மேலாளரின் உத்தரவுக்கு இணங்க அறைக் கதவை மாற்றுச்சாவியைக் கொண்டு ஊழியர் திறந்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பேரும் மாண்டதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.