உபுட் (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் பாலி மாநிலத்தில் இருக்கும் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில் மரம் விழுந்ததில் வெளிநாட்டவர் இருவர் உயிரிழந்தனர்.
உபுட் நகரில் உள்ள குரங்குப் பூங்காவில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 10) நிகழ்ந்தது. குரங்குப் பூங்காவுக்கு வருகை தந்த இன்னொருவர் மோசமான காயங்களுக்கு ஆளானார்.
பிரான்சைச் சேர்ந்த ஃபனி ஜஸ்டீன் கிறிஸ்டின் எனும் 32 வயது மாதும் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஹிரே இயுன் எனும் 42 வயது மாதும் உயிரிழந்தனர். குரங்குப் பூங்காவில் கூட்டம் திரண்டிருந்த நேரத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.25 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது.
காயமுற்றவர், தென்கொரியாவைச் சேர்ந்த லீ சன் நி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குரங்குப் பூங்காவில் இருக்கும் பிரஜாபதி கோயிலுக்கு அருகே பலத்த காற்றாலும் கனமழையாலும் மரங்கள் சாய்ந்தன என்று பாலி காவல்துறையின் மூத்த ஆணையர் ஜேன்சன் அவிட்டஸ் பஞ்சாய்த்தான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அப்பகுதி ஊழியர்களும் பார்வையாளர்களும் விரைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கேனாக் (Kenak) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக திரு ஜேன்சன் கூறினார்.
சம்பவ இடத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

