தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை டொல்பின் சூறாவளி அச்சுறுத்தி வருகிறது.
பலத்த காற்று, கனமழை, கடல் அலைகளின் சீற்றம் ஆகியவற்றின் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், 500க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) ரத்து செய்யப்பட்டன.
ககோஷிமா, ஒகினாவா பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 260,000 குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூர்-ஜப்பான் இடையிலான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆகிய இரு நாள்களுக்கான விமானச் சேவைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை எனச் சாங்கி விமான நிலைய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, தனது ஒன்பது தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை ஆகஸ்ட் 7ஆம் தேதி நிறுத்தியது.
இதற்கிடையே, கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமமோட்டோ பகுதியில் 6,700 பேர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அங்கு வெப்பநிலை 36 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்பதால், வெப்பத்தாக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


