துபாயைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் வித்தியாசமான முறையில் தன் மகளுக்கு மணமுடித்து வைத்துள்ளார்.
அதற்காக, தனியார் விமானம் ஒன்றைய திருமண மண்டபமாக அவர் மாற்றினார். இம்மாதம் 24ஆம் தேதி அத்திருமணம் நடைபெற்றது.
திலிப் பாப்லி என்ற அந்தத் தொழிலதிபருக்கு இந்தியாவிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் (யுஏஇ) நகைக்கடைகள் உள்ளன.
இந்தத் திருமண விழாவில் கலந்துகொள்ள பல நாடுகளிலிருந்தும் 350 விருந்தினர்கள் வந்திருந்தனர்.
மணமக்களும் விருந்தினர்களும் அந்த போயிங் 747 விமானத்தில் ஓமானிலிருந்து துபாய்க்கு மூன்று மணி நேரம் பறந்தனர். அந்த மூன்று மணி நேரத்தில் திருமணம் நடந்தேறியது.
“துபாய் எனது இல்லம். இது ‘வானில் திருமண’த்தின் தொடர்ச்சி,” என்று திரு பாப்லி சொன்னதாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
“என் மகளின் திருமணம் வானில் நடக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனை நனவாக்க துபாயைவிட வேறு சிறந்த இடம் இருக்க முடியாது,” என்றார் அவர்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், திரு பாப்லியும் கடந்த 1994ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில்தான் தன் மனைவி சுனிதாவைக் கைப்பிடித்தார். அப்போது, அவருடைய தந்தையார் லட்சுமண் பாப்லி அத்திருமணத்தை நடத்திவைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த பிரம்மாண்ட திருமணம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.


