இங்கிலாந்தில் சமீப நாள்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா ரக கொரோனா கிருமித்தொற்று அங்கு வேகமாகப் பரவிவருகிறது.
அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்து வருகிறது.
இந்தப் புதிய பாதிப்புகளில் 90% டெல்டா ரக கொரோனா கிருமித்தொற்று என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் கிருமித்தொற்று நிலவரத்தை கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
வரும் ஜூலை 19 ஆம் தேதிக்குப் பிறகே ஊரடங்கு தளர்வுகள் நடப்புக்கு வரும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவும் சூழலில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கை மேற்கொண்டு நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது எனவும் போரிஸ் ஜான்சன் கூறினார்.

