இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய ஐவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கும்பல் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய காற்பந்து ஆட்டங்களை பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர்.
அந்த ஐவருக்கும் மூன்றிலிருந்து 11 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 30 - 46 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
கும்பலின் தலைவனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததன்மூலம் அவர்கள் கிட்டத்தட்ட 12 மில்லியன் வெள்ளி சம்பாதித்துள்ளனர்.
காற்பந்து மட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி தொடர்கள், படங்கள், நாடகங்களையும் அக்கும்பல் ஒளிபரப்பியுள்ளது.
சட்டவிரோதமாக ஒளிபரப்பிற்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற குற்றங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை விதிக்கப்பட்டதில்லை.
சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்துக்கொண்டு பிரிட்டன், கத்தார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்துள்ளனர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்கள் உலக அளவில் பிரபலமானவை. அந்த ஆட்டங்களை பிரிட்டனில் 2022 - 2025ஆம் ஆண்டுவரை ஒளிபரப்புவதற்கான உரிமத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 8.3 பில்லியன் வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.