மாஸ்கோ - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், ஒரு சில அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டால்தான் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்திக்க முடியும் என்று கூறியுள்ளார்.
கிரெம்லின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அது என்னென்ன அம்சங்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. 2019ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு திரு புட்டினும் திரு ஸ்லென்ஸ்கியும் நேரடியாகச் சந்தித்துக்கொள்ளவில்லை.
துருக்கியில் இந்த வாரம் திரு புட்டின் தம்மை நேரடியாகச் சந்திக்கும்படி திரு ஸெலென்ஸ்கி கேட்டிருந்தார். மாறாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் இருதரப்புச் சந்திப்பில் உக்ரேனிய சமரசப் பேச்சாளர்களைச் சந்திக்க திரு புட்டின் தமது உதவியாளர்கள் கொண்ட குழுவையும் அதிகாரிகளையும் அனுப்பிவைத்தார்.
திரு புட்டினும் திரு ஸெலென்ஸ்கியும் நேரடியாகச் சந்திப்பது குறித்த விவகாரத்தைச் சமரசக் கலந்துரையாடலின்போது மீண்டும் எழுப்பியதாக உக்ரேன் குறிப்பிட்டது.
அத்தகைய கூட்டம் இடம்பெறுவது சாத்தியமே என்றார் திரு பெஸ்கோவ்.