தோக்கியோ: ரஷ்ய எதிர்த்தரப்புத் தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யா மீது புதிய பொருளியல் தடைகளை விதிக்க உக்ரேனியப் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஜப்பானையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யாவில் குற்றவாளிகள் வைக்கப்படும் தொலைதூர இடத்தில் நவால்னி மரணமடைந்தார். அதனை அடுத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, லித்துவேனியா, சுவீடன் ஆகியவை குறிப்பிடும்படியான, புதிய தடைகளுக்குக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரின் கருத்து வந்துள்ளது.
இந்நிலையில், மாஸ்கோ விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் எச்சரித்துள்ளார்.
“நாங்கள் பொருளியல் விவகாரங்களின் தொடர்பில் தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று உக்ரேனியப் பிரதமர் டெனிஸ் ஷிமஹல் தோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
உக்ரேனை மறுசீரமைப்பது பற்றி கலந்துபேச அவர் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை அங்குச் சந்தித்தார்.
அதோடு, உக்ரேனியப் படைகளுக்கு ராணுவ ஆதரவை வழங்கும் நோக்கில் அமெரிக்கா கொடுக்கவிருக்கும் உதவித் திட்டத்தைப் பெற கியவ் ஆவலுடன் இருக்கிறது,” என்றும் திரு ஷிமஹல் கூறினார்.

