மாஸ்கோ: இரவோடு இரவாக உக்ரேன் அனுப்பிய 350க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை அதன் ராணுவப் படை அழித்துவிட்டதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (மே 7) தெரிவித்தது.
இருதரப்பும் சண்டை நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. புதன்கிழமை சண்டையை நிறுத்த உக்ரேன் அழைப்பு விடுத்தது. அதனை கண்டுகொள்ளாத ரஷ்யா, காலைமுதல் இரவு முழுதும் தாக்குதலைத் தொடர்ந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வென்ற தினத்தைக் கொண்டாட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சனிக்கிழமை (மே 9) சண்டை நிறுத்தம் செய்துகொள்ள முதலில் அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் தலைநகரின் சிவப்புச் சதுக்கத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பை ஆண்டுதோறும் ரஷ்யா நடத்தும்.
அந்த அழைப்பை முன்வைத்து உக்ரேன் மே 6ஆம் தேதி சண்டையை முதலில் நிறுத்த வேண்டிக்கொண்டது. அதனை ரஷ்யா பொருட்படுத்தாததால், தற்போது, சனிக்கிழமை ராணுவ அணிவகுப்பின்போது உக்ரேன் தாக்குதல் நடத்தும் சாத்தியம் உள்ளதென நம்பப்படுகிறது.
ரஷ்யா, உக்ரேன் எல்லை
தற்போதைய தாக்குதலில் பெல்கொரொட் என்ற இருநாட்டு எல்லைப் பகுதியில் ஒரு மாது கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் கூறினார். ரஷ்யா 102 ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாக உக்ரேன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

