ரஷ்யக் கடற்கரையில் உக்ரேனின் வானூர்தித் தாக்குதல்: எழுவர் மரணம்

ரஷ்யக் கடற்கரையில் உக்ரேனின் வானூர்தித் தாக்குதல்: எழுவர் மரணம்

படம்: பிபிசி ஊடகம்

04 Aug 2026 - 6:34 pm

1 mins read

ஆர்கிபோ-ஒசிபொவ்கா: ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் உக்ரேன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) ஆளில்லா வானூர்தியைக் கொண்டு (ட்ரோன்) தாக்குதல் நடத்தியது.

கருங்கடலின் கரையில் நடந்த அத்தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட எழுவர் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி ஊடகம் உறுதிப்படுத்திய சமூக ஊடகக் காணொளியில் ஒரு குன்றின் அருகே பறந்த வானூர்தி, கடற்கரையில் விழுந்து வெடித்துச் சிதறுவதும் அதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அதிர்ச்சியுடன் பார்ப்பதும் பதிவாகியுள்ளது.

காயமடைந்தோரின் எண்ணிக்கை 40ஐ எட்டிய நிலையில் 17 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கிராஸ்நொடர் பகுதியின் ஆளுநர் வெனியாமின் கொன்ட்ராட்யெவ் கூறினார்.

பொதுமக்களைக் குறிவைத்து தாக்குவதாக உக்ரேனை அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரேன் எவ்விதக் கருத்தையும் வெளியிடவில்லை. ரஷ்யா, உக்ரேன் இருதரப்பும் பொதுமக்களைத் தாக்குவதாக எழும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன.

அந்த வானூர்தி எதனை அல்லது யாரைக் குறிவைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில உக்ரேனிய ஊடகங்கள், மின்னிலக்கப் போரினால் அந்த வானூர்தியின் சமிக்ஞைகள் ரஷ்யாவால் இடைமறிக்கப்பட்டு தவறுதலாக அது கடற்கரையில் விழுந்திருக்கலாம் எனத் தெரிவித்தன.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வானூர்தி நெருங்கியபோது துப்பாக்கிகளால் சுடப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும் கூறியுள்ளனர். எனவே ரஷ்ய ராணுவத் தற்காப்புப் படை அதனைச் சுட்டு வீழ்த்த முயன்றதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்ரஷ்யாசுற்றுலாப் பயணிகள்சுற்றுலாட்ரோன் தாக்குதல்ட்ரோன்மரணம்குழந்தைகாயம்மருத்துவமனை