நியூயார்க்: ஐநா எனும் ஐக்கிய நாட்டு நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முடிவுகளை எடுக்க நாடுகளுக்கு உதவுவதற்கு இக்குழு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) உருவாக்கப்பட்டது.
வாழ்க்கைப் போக்கை மாற்றியமைக்கக்கூடியதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி குறித்து ஐநா உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்தன. ஜனநாயக முறை, மனித உரிமை ஆகியவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு பங்கம் விளைவிக்கக்கூடும் என்பது அவற்றின் அச்சம்.
அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிக் ஆலோசனைக் குழுவை அமைக்க ஐநா உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இக்குழுவில் வல்லுநர்களாக விளங்கும் விஞ்ஞானிகள் இடம்பெறுவர். அந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு குறித்து அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த ஆதரவளிப்பர்.
அனைத்துலக சுயேச்சை செயற்கை நுண்ணறிவு அறிவியல் குழுவை (Independent International Scientific Panel on Artificial Intelligence) அமைப்பதற்கு வரையப்பட்ட தீர்மானத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. 40 பேர் இடம்பெறவுள்ள இக்குழுவில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இனி ஈடுபடுவார்.
குழு உறுப்பினர்கள் மூவாண்டு காலத்துக்குப் பொறுப்பு வகிப்பர்.

