பாரிஸ்: தென் பிரான்சில் மூண்ட பெருந்தீ 16,000 ஹெக்டர் வனப் பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் பரவியது.
ஆகஸ்ட் 5 முதல் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தீ அணைக்கப்பட்டபோதிலும் மீண்டும் எரியாமல் பார்த்துக்கொள்ள தீயணைப்பாளர்கள் அடுத்த சில நாள்களுக்கு அந்தப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறினர்.
தீ சூழ்ந்ததால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்கள் மீண்டும் இல்லம் திரும்ப அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.
கட்டுக்கடங்காமல் எரிந்த தீ காரணமாக பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டு மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இடிபாடுகள் சிதறியதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டு உள்ளன. செயின்ட்-லோரன்ட்-டே-ல-காப்ரேரிஸ்ஸ கிராமம்தான் தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளில் பிரான்ஸ் சந்தித்திருக்கும் ஆகப்பெரிய தீச்சம்பவம் இது. பெண் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், 16 தீயணைப்பாளர்கள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.
36 வீடுகளும் 20 கட்டடங்களும் சேதமடைந்துவிட்டன. கிட்டத்தட்ட 5,000 வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வரை அந்த வீடுகளில் 1,500 வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.
ஏறத்தாழ 2,000 குடியிருப்பாளர்களும் விடுமுறையைக் கழிக்க வந்த சுற்றுப் பயணிகளும் தீயின் கோரப் பிடிக்குள் சிக்காமல் தப்பி ஓடினர்.