சிட்னி: கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது ஏறத்தாழ 2,000 ஊழியர்களைச் சட்டவிரோதமாகப் பணிநீக்கம் செய்ததற்காக குவான்டாஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு 90 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$75.2 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முறையற்ற செயலில் ஈடுபட்டதற்காக குவான்டாஸ் சாடப்பட்டது.
அதன் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
முன்பு போல இல்லாது அந்த நிறுவனம் அதிகளவில் மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அபராதத் தொகையில் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரைப் போக்குவரத்து ஊழியர் சங்கத்திடம் நேரடியாகச் செலுத்தும்படி குவான்டாசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணிநீக்கம் தொடர்பாக குவான்டாசுக்கு எதிராகப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வழக்கு தொடுத்திருந்தது.
பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 120 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீட்டு ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விமானப் போக்குவரத்துத்துறை முடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் உள்ள பத்து விமான நிலையங்களில் விமான நிலையச் செயல்பாடுகளுக்காக வேறு நிறுவனங்களை குவான்டாஸ் பயன்படுத்தியது.
சம்பளம், வேலை நிபந்தனைகள், உத்தேச வேலை நிறுத்தங்கள் ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்க ஊழியர்களைக் குவான்டாஸ் பணிநீக்கம் செய்ததாக போக்குவரத்து ஊழியர் சங்கம் வாதிட்டது.