துபாய்: வளைகுடா வட்டாரத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களை நிறுத்த ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க அதிகாரி ஒருவர் அதனை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணை குறித்த பேச்சுகளை மீண்டும் தொடங்க இருதரப்பும் இணங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட இடைக்காலச் சண்டை நிறுத்தம், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டதால் நெருக்குதலுக்கு உள்ளானது.
“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேச்சுகளைத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது. இருதரப்பும் இப்போது அமைதி காக்கும், கப்பல்கள் தடையின்றி சென்றுவரலாம்,” என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.
இம்மாதம் 17ஆம் தேதி, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் இணங்கின. அதன்படி போக்குவரத்துக்கு நீரிணை மீண்டும் திறந்துவிடப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
சண்டை நிறுத்தம் பற்றி முதலில் தகவல் வெளியிட்ட ஆக்சியோஸ் ஊடகம், சமரசப் பேச்சு செவ்வாய்க்கிழமை கத்தாரில் தொடங்கும் என்று குறிப்பிட்டது.
இம்மாதம் 25ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஏவுகணை ஒன்று சரக்குக் கப்பல்மீது தாக்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக இரு நாடுகளும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. சண்டை நிறுத்தத்தை மீறிவிட்டதாக ஈரானும் அமெரிக்காவும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறின.

