மலேசியாவின் மூன்று அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவின் மோசடிக் குற்றச்சாட்டு

மலேசியாவின் மூன்று அரசு அதிகாரிகள் மீது அமெரிக்காவின் மோசடிக் குற்றச்சாட்டு

2 mins read
35e24035-c0a1-4785-9057-352a5e444b44
டெலிகாம் மலேசியா நிறுவனம் தனது குற்றச்செயலைத் தானாகவே முன்வந்து தெரிவித்து, அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. - படம்: ராய்டட்ர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான ‘டெலிகாம் மலேசியா’ (டிஎம்) 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($25.6 மில்லியன்) அதிகமான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்நிறுவனத்தின் மூன்று மூத்த ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது என அமெரிக்க நீதித்துறை, மே 19ஆம் தேதியன்று தெரிவித்தது.

டிஎம்-இன் அமெரிக்கக் கிளையில் மூத்த நிர்வாகிகளாக இருந்த முகமது ஹபீஸ் லாக்மேன், முகமது யூசைமி யூசோஃப், கான் துவாங் நுயென் ஆகியோர், 2020 ஜூலை முதல் 2026 பிப்ரவரி வரையிலான பல்வேறு காலகட்டங்களில், தவறான அறிக்கைகள் மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, நிறுவனத்திலிருந்து நிதியைத் திருடியுள்ளார்கள்.

இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள எதிர்தரப்பினர், விநியோகிப்பாளர்கள், தணிக்கையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோரை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இந்த மூவரும் தங்களின் சொந்த நிதி ஆதாயத்திற்காக நிறுவனப் பதிவுகளைப் போலியாக மாற்றி, ஒரு திட்டமிட்ட மற்றும் கணக்கிடப்பட்ட நிதி மோசடித் திட்டத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,” என்று அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் பொறுப்பு உதவி இயக்குநர் ஜேம்ஸ் சி. பார்னக்கிள் ஜூனியர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முகமது ஹபீஸ், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மற்ற இரண்டு குற்றவாளிகளும் ஏப்ரல் மாதம் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். அந்த மூவர் மீதும் மின்னணுவியல் தொலைத்தொடர்பு மூலம் மோசடி சதி, மின்னணுவியல் தொலைத்தொடர்பு மூலம் மோசடி, மோசமான அடையாளத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை கூறியது.

முகமது ஹபீஸ், முகமது யுசைமி, நுயென் ஆகியோரை கருத்து கேட்பதற்காக உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கருத்து கேட்பதற்கான கோரிக்கைக்கு டிஎம் நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. டிஎம் நிறுவனம் தனது குற்றச் செயல்களைத் தானே முன்வந்து தெரிவித்ததாலும், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக உறுதியளித்ததாலும், அந்நிறுவனத்தின் மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாக அமெரிக்க நீதித்துறை கூறியது.

குறைக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் பிற சலுகைகளுக்கு ஈடாக, நிறுவனங்கள் குற்றச் செயல்களைப் புகாரளிக்க ஊக்குவிக்கும் ஒரு கொள்கையை அமெரிக்க நீதித்துறை அறிமுகப்படுத்துவதாக ராய்ட்டர்ஸ் மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.

அமெரிக்கக் குற்றப்பத்திரிகையின்படி, பிரதிவாதிகள் டிஎம் நிறுவனத்திலிருந்து மில்லியன் கணக்கான டாலரைத் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குத் திசை திருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
நீதித்துறைநிதி மோசடிகைது