வாஷிங்டன்: சீன அதிபரை அடுத்த வாரம் சந்திக்கும்போது, ஈரான் போர் குறித்த விவாதம் இடம்பெறும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிட நட்பு நாடுகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.
நீரிணையில் ஈரான் ஏற்படுத்தியுள்ளத் தடைகளை அகற்ற இவ்வாரம் அமெரிக்கா தொடங்கிய புதிய முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நட்பு நாடுகளை உதவிக்கு அழைத்தார் அதிபர் டிரம்ப்.
“தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு உதவ முன்வருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் செவ்வாய்க்கிழமை (மே 5) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
‘புரோஜெக்ட் ஃபிரீடம்’ என்ற பெயரில் நீரிணைக்கான விடுதலைத் திட்டத்தை கடந்த திங்கட்கிழமை (மே 4) அமெரிக்கா கையிலெடுத்தது.
ஹோர்முஸ் நீரிணையின் கடல் பகுதியில் சிக்கியுள்ள வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்காக அத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இஸ்ரேல், அமெரிக்கா இருநாடுகளும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஈரான்மீது போர் தொடங்கியது முதல் அந்த நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைத் தடுத்து வருகிறது.
இரு கப்பல்கள் நீரிணையைக் கடந்துள்ளன
புதிய திட்டப்படி இதுவரை, அமெரிக்க தேசியக் கொடிகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் மட்டுமே அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்போடு அப்பகுதியைக் கடந்து வெளியேறியுள்ளன.
இருப்பினும் அந்த நிகழ்வு நடந்ததும் ஈரானும் அமெரிக்காவும் ஒன்றின்மீது ஒன்று அங்கு மீண்டும் தாக்குதலைத் தொடங்கின.
தொடர்புடைய செய்திகள்
ராணுவ நடவடிக்கையில் சம்பந்தப்படாத தென்கொரிய வர்த்தகக் கப்பல் உட்பட மற்ற இலக்குகளையும் ஈரான் தாக்கியதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

