பென்சில்வேனியா: அமெரிக்காவும் ஈரானும் அணுவாயுதச் சோதனைகள் தொடர்பிலும் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பிலும் முரண்படும் கருத்துகளை முன்வைத்துள்ளன.
எத்தனை முறை வேண்டுமானாலும் அணுவாயுதச் சோதனைகளை நடத்திக்கொள்ள ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) கூறினார்.
ஆனால், அது தொடர்பிலான இணக்கம் எதுவும் பேச்சுவார்த்தையின்போது செய்யப்படவில்லை என்று ஈரான் தெரிவித்தது.
அமெரிக்காவும் ஈரானும் சுவிட்சர்லாந்தில் இம்மாதம் 22ஆம் தேதி, முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தின.
அதையடுத்து, ஈரானுக்கான நிதிச் சலுகைகள், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு, லெபனான்மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் ஆகியவை குறித்து இரண்டு நாடுகளும் முரணான கருத்துகளை முன்வைத்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனைத்துக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் இருதரப்பும் கடந்த வாரம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன.
அப்போது, ஈரானுடனான பேச்சுவார்த்தை சுமுகமாகச் செல்வதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஈரானின் காற்பந்து அணிக்கான பயணக் கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியது. அதன் மூலம் அடுத்த ஆட்டத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே டிஜுவானாவிலிருந்து சியேட்டலுக்கு ஈரான் அணியால் பயணம் செய்ய முடிந்தது.
இந்நிலையில், நீண்டகால அமைதிக்கான சாத்தியம் வெகுதூரத்தில் இருந்தாலும் தொடக்கக் கட்ட ஒப்பந்தத்தின்படி ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்கியபோது மளமளவென உயர்ந்த எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) கணிசமாகக் குறைந்தது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டபோது கிட்டத்தட்ட 11,000 கடலோடிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிகளை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கப்பல் அமைப்பு ஆலோசித்துவருவதாகத் தெரிவித்தது.

