வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியக் கடன் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலரை (50.84 டிரில்லியன் வெள்ளி) விஞ்சியுள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்ட அரசாங்கப் புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரியவந்தது. முன்னதாகக் கணிக்கப்பட்டதைவிட கடன் தொகை அதிகமாகப் பதிவானது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிகள் செல்லுபடியாகாமல் போனது இந்நிலை உருவானதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய அம்சங்களில் தனது கடமைகளைப் பூர்த்திசெய்வதற்காக அமெரிக்கா கூடுதல் கடனைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. அதோடு, அந்நாடு செலுத்தவேண்டிய வட்டித் தொகையும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) நிலவரப்படி இன்னும் செலுத்தப்படவேண்டிய பொதுக் கடன் தொகை 40.5 டிரில்லியன் டாலராகப் பதிவானது.
2026 நிதியாண்டின் இறுதிக்குள் தேசியக் கடன் தொகை 39.4 டிரில்லியன் டாலரைத் தொடும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட அலுவலகம் முன்னதாகக் கணித்திருந்தது.
பணவீக்கம், மத்திய கிழக்குப் பூசல் உள்ளிட்ட காரணங்களின் தொடர்பில் கவலைகள் இருந்துவரும் சூழலில் அமெரிக்கா பெற்றுள்ள கடன் தொகை அதிகரித்து வருகிறது.
தேசியக் கடன் அதிகரித்துள்ளதால் 2008ஆம் அண்டு உலக நிதி நெருக்கடிக்கு முன்பிருந்ததையும்விட அதிகக் கட்டணத்தில் பழைய கடன் திட்டங்களைப் புதுப்பிக்கும் நிலை அமெரிக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.


