அமெரிக்க காவல்துறை புதிதாக ஓர் காணொளியை வெளியிட்டுள்ளது.
அந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காணொளி பார்க்க ஹாலிவுட் படங்களில் வரும் கார் சண்டைக் காட்சி போல் இருப்பதாக இணையவாசிகள் கூறினர்.
அயோவா காவல்துறையைச் சேர்ந்த பாட்ரிக் மெக்கார்டி என்னும் அதிகாரி எப்போதும் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் பாட்ரிக் சோதனை செய்ய நேரிட்டது.
அதிகாரி ஓட்டுநரை காருக்கு வெளியே வந்து சரணடையுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்தார் ஓட்டுநர்.
அதிகாரி துப்பாக்கியை ஏந்தியவாறு காரின் முன்பகுதி மேல் ஏறி நின்றுள்ளார்.
ஆனால் ஓட்டுநர் தயக்கம் இன்றி வாகனத்தை வேகமாகச் செலுத்தியுள்ளார். அசராத அதிகாரி காரை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்.
காரின் வேகத்தால் அதிகாரி காரின் மேல்கூரைக்குச் சென்று கீழே விழுந்தார்.
அதில் அவரின் இடுப்புப் பகுதியில் முறிவு ஏற்பட்டது.
பிறகு ஓட்டுநர் பிடிபட்டார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் 2021ஆம் ஆண்டு நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அதை இப்போது தான் காவல்துறை வெளியிட்டுள்ளது.