ஃபுளோரிடா: கடலுக்கடியில் நீண்ட நாள் தங்கி, புதிய சாதனை படைத்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர்.
டாக்டர் ஜோசஃப் டிட்டுரி எனும் இவர், கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, ஜூல்ஸ் கடலடித் தங்குவிடுதியில் 74 நாள்களைக் கழித்துவிட்டார்.
ஃபுளோரிடாவில் ஒன்பது மீட்டர் ஆழத்திலுள்ள உப்பங்கழித்தீவு ஒன்றில் அமைந்துள்ளது முக்குளிப்பாளர்களுக்கான அவ்விடுதி.
கடலுக்கடியில் 100 நாள்கள் கழிக்க வேண்டும் என்பது டாக்டர் ஜோசஃபின் திட்டம்.
அங்குள்ள மிகை அழுத்தத்தை மனித உடல் எவ்வாறு கையாள்கிறது என்று இவர் ஆய்வு செய்து வருகிறார்.
அங்கிருந்தபடியே பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையத்தில் வகுப்பு எடுக்கும் இவரை நண்பர்களும் குடும்பத்தினரும் மருத்துவர்களும் அவ்வப்போது சென்று பார்த்து வருகின்றனர்.
அன்றாடம் ஒரு மணி நேரம் தனது இருப்பிடத்தைச் சுற்றி முக்குளிக்கும் இவர், மேற்பரப்புக்கு வருவதே இல்லை. கடலடியில் வசிப்பது மிகவும் பிடித்துள்ளது என்று கூறும் டாக்டர் ஜோசஃப், சூரியனைப் பார்க்க முடிவதில்லை என்பது மட்டுமே தனது வருத்தம் என்கிறார்.
கடலடி ஆய்வைத் தொடங்குமுன் சூரிய உதயத்தைக் காண்பது இவரது அன்றாடக் கடமைகளில் ஒன்று.