வடகொரியா ஏவுகணை பாய்ச்சியதற்குக் கண்டனம்

வடகொரியா ஏவுகணை பாய்ச்சியதற்குக் கண்டனம்

1 mins read
66bfc8aa-5969-4184-b5f1-016bd37b4b0d
வடகொரியாவில் விவரம் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் திங்கட்கிழமை சோதனைக்குத் தயாராகும் ‘ஹுவாசோங்-18’ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. - படம்: இபிஏ

வாஷிங்டன்: வடகொரியா அண்மையில் ஏவுகணைகளைப் பாய்ச்சியதற்கு அமெரிக்க, தென்கொரிய, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், முன்நிபந்தனையின்றி உறுதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வடகொரியாவிடம் வலியுறுத்தினர்.

வடகொரியா திங்கட்கிழமை ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, அமெரிக்கா இருக்கும் தூரம் வரை சென்று அங்கு எங்கேயாவது விழும் சாத்தியம் நிலவியதாக தென்கொரியாவும் ஜப்பானும் கூறின.

அந்த ஏவுகணைக்கு 15,000 கிலோமீட்டர் தூரத்துக்குமேல் செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது. ஜப்பானிலோ அமெரிக்காவிலோ ஏவுகணை விழக்கூடும் என்று ஜப்பானியத் தற்காப்புத் துணை அமைச்சர் சிங்கோ மியாகே திங்கட்கிழமை சொன்னார்.

“வடகொரியாவின் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஒன்றுபட்டு நிற்கின்றன,” என்று அமெரிக்க, ஜப்பானிய, தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்