சோல்: தென்கொரியாவில் இரண்டு மாதகாலம் சிறைவாசம் அனுபவிக்க அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், இரு கொரியாக்களுக்கும் இடையிலான பலத்த பாதுகாப்புள்ள எல்லையைக் கடந்து சென்றதால் இப்போது வடகொரியாவின் காவலில் இருப்பதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீரரின் பெயர் டிராவிஸ் கிங் என்று அமெரிக்க ராணுவம் அடையாளம் காட்டியது. இரண்டாம் தர ‘பிரைவேட்’ பதவி வகிக்கும் கிங், 2021 முதல் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார். அவர், ‘அனுமதியின்றி வேண்டுமென்றே’ எல்லையைக் கடந்து சென்றதாக அமெரிக்காவின் கொரியப் படை பேச்சாளர் கர்னல் ஐசக் டெய்லர் கூறினார்.
“தாக்குதல் குற்றத்திற்காக இரண்டு மாதங்கள் தென்கொரியச் சிறையிலிருந்த கிங், ஜூலை 10ஆம் தேதி விடுதலையானார்,” என்று தென்கொரிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஒழுங்கீன நடத்தையால் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த கிங், விமான நிலையத்திலிருந்து எப்படியோ வெளியேறி, கூட்டுப் பாதுகாப்பு வட்டார அறிமுகப் பயணம் சென்றிருந்த குழுவுடன் சேர்ந்து வடகொரியாவுக்குள் சென்றதாகவும் இப்போது அவர் வடகொரியாவின் காவலில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஐக்கிய நாட்டுத் தளபத்தியம் தெரிவித்தது.
‘இந்தச் சம்பவத்திற்குத் தீர்வுகாண’ பியோங்யாங் ராணுவத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.