வாஷிங்டன்: எண்ணெய், எரிசக்தித் துறையிலிருந்து மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்க அரசாங்கம் US$1.55 பில்லியன் (S$2 பில்லியன்) வரையிலான நிதியை வழங்கும் என்று இரண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கசிவுகளிலிருந்தும் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்தும் வெளியாகும் மீத்தேன் வாயுவைக் குறைக்க நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
எண்ணெய், எரிவாயுச் செயல்பாடுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவின் அளவு, ஓர் ஆண்டுக்கு மில்லியன்கணக்கான வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறிய எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை நிரந்தரமாகக் குறைக்க, அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய எரிசக்தித் தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் மாநிலங்களுக்கு US$350 மில்லியன் வரை நிதி வழங்கப்படும்.
ஒட்டுமொத்த தாக்கம் 2022க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் 15 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.