பத்து பஹாட்: ‘பியூ பியூ’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் கலந்ததாக நம்பப்படும் 600க்கும் மேற்பட்ட மின்சிகரெட் தகடுகள் (catridges) ஜோகூர் மாநிலத்தின் செங்காராங் நகருக்கு அருகே உள்ள நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
மலேசிய கடல்துறை அமலாக்க அமைப்பு (எம்எம்இஏ) மேற்கொண்ட முறியடிப்பு நடவடிக்கையின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டன.
அந்தத் தகடுகளின் மொத்த மதிப்பு 160,000 ரிங்கிட்டுக்கு (50,322 வெள்ளி) மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதியில் விட்டுச் செல்லப்பட்ட கறுப்புப் பையில் அவை கண்டெடுக்கப்பட்டதாக பத்து பஹாட் கடல்துறைப் பகுதி இயக்குநரான தளபதி முகம்மது ஸைனி ஸைனால் தெரிவித்தார்.
எம்எம்இஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொண்டபோது சந்தேகத்துக்குரிய படகு கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
பறிமுதல் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களும் மேல் நடவடிக்கைக்காகவும் விசாரணைக்காகவும் பத்து பஹாட் கடல்துறைப் பகுதி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஸைனி கூறினார். மின்சிகரெட் தகடுகளில் உள்ள திரவியத்தில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்த அதன் மாதிரி அங்கங்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.
மேலும், மலேசிய நீர்ப்பகுதிகளில் இடம்பெறும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு எம்எம்இஏ, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


