பினாங்கு: மலேசியாவில் பருவமழை காரணமாக நிலவும் ஈரமான வானிலையால் காய்கறிகளின் அறுவடை குறையும் என்பதால் வரும் மாதங்களில் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் வரை பருவமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஈரமான வானிலை காரணமாகக் காய்கறிகள் விலை உயரும் எனக் காய்கறிகள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லீ கா ஷியுவான் கூறினார்.
மேலும், பாதிக்கப்படும் உள்நாட்டுக் காய்கறிகளில் கடுகுக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரை வகைகளும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
கேமரன் மலையில் விளையும் காய்கறிகளான தக்காளி, ஜப்பானிய வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளின் விளைச்சல் மழையால் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“பல இடங்களில் மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.”
“இதனால் தக்காளி மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியின் விலை 3 ரிங்கிட்டாக ( S$0.87) இருந்தது. ஆனால் இப்போது அது 6 ரிங்கிட்டிலிருந்து 6.50 ரிங்கிட் வரை விற்பனையாகிறது. அதனுடைய விலை தற்போது இரட்டிப்பாகியுள்ளது,” என்று அவர் காய்கறிகள் விலை உயர்வு குறித்து விவரித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடு உயர்ந்துள்ளதே தவிர, தற்போது வரை காய்கறிகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தன்னுடையைக் கடைக்கு விற்பனைக்கு வரும் 60 விழுக்காடு காய்கறிகள் கேமரன் மலை பகுதியிலிருந்து வருவதால் வழக்கம் போல் வியாபாரம் நடந்து வருவதாகக் காய்கறி விற்பனையாளரான 56 வயது, கே.சேகர் கூறினார்.
“பினாங்கில்தான் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. கேமரன் பகுதியில் வானிலை நன்றாக உள்ளது. அங்கு மழை பெய்கிறது என எச்சரிக்கை வந்தால் காய்கறிகள் விலை உயரும் என்பது எங்களுக்குத் தெரியும்,” எனக் காய்கறிகளின் விலையேற்றம் குறித்து அவர் தெரிவித்தார்.