வெனிசுவேலா: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள வெனிசுவேலாவில், கட்டட இடிபாடுகளில் நான்கு நாள்களாகச் சிக்கியிருந்த தந்தையும் மகனும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
லா குவைரா பகுதியில் உயிர்தப்பியோரைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு, அமெரிக்க மீட்புப் பணியாளர்களுக்கு இது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. கரையோர மாநிலமான அது, ஜூன் 24ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்தத் தந்தை, மகன் இருவரையும் மீட்புக் குழுவினர் கிட்டத்தட்ட 12 மணி நேரம் போராடி மீட்டனர். தேடல் பணியில் சிறப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
ஏறத்தாழ நான்கு நாள்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் இருவரும் மிகுந்த சோர்வடைந்திருந்ததாகக் கூறப்பட்டது.
சிகிச்சைக்காக அவ்விருவரும் அவசர மருத்துவ வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை மீட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

