கோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக B40 பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பொருட்டு, மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் 2.0 கூடுதல் ஒதுக்கீடுகளுடன் ‘வெற்றி மடானி’ என மறுபெயரிடப்படவுள்ளது.
மலேசிய திறனாளர் அமைப்பு, டெலண்ட்கார்ப் (TalentCorp), எச்ஆர்டி கார்ப் (HRD CORP) எனப்படும் மனிதவள மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ‘வெற்றி மடானி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தற்போது நாங்கள் இன்னும் கலந்துரையாடி வருகிறோம். இதற்கான ஒதுக்கீடு 40 லட்சம் ரிங்கிட் ஆகும். அது உண்மையில் பன்மடங்காகும் என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியும். எனினும், இது எந்தளவில் உள்ளது என்பது குறித்து நாங்கள் ஓர் ஆய்வை நடத்துவோம். அதுகேற்ப ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படலாம். ஒதுக்கீட்டை நாங்கள் வீணாக்க விரும்பவில்லை. நிதியை விரயமாக்க விரும்பவில்லை. ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்,’’ என்றார் அவர்.
உண்மையான ஒதுக்கீட்டுத் தொகையை அறிவிப்பதற்கு முன்னர், இத்திட்டத்திற்கான வரவேற்பைக் காணும் வகையில், முதலில் அதற்கான பதிவு திறக்கப்படும் என்று ரமணன் விவரித்தார்.
அதோடு, தற்போதைய தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் திறன் பயிற்சிகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பட்டதாரிகளுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை பட்டதாரிகளுக்கு அதிக ஊதியம் பெற இந்த ‘வெற்றி மடானி’ திட்டம் உதவும் என்று ரமணன் நம்பிக்கை தெரிவித்தார் என பெர்னாமா செய்தி கூறியது.

