நைக்கி, அடிடாஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களுக்குப் பொருள்களைத் தயார் செய்யும் வியட்னாமிய தொழிற்சாலையில் இம்மாத இறுதியில் 6,000 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாவர்கள் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது போதுமான அளவில் விற்பனை இல்லாத காரணத்தால் காலணி, உடைகள் செய்வதற்கான தேவை பவ்யூன் தொழிற்சாலையில் குறைந்துள்ளது.
அதனால் இம்மாத இறுதியில் 3,000 ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மேலும் 3,000 பேரின் வேலை ஒப்பந்தம் புதுபிக்கப்படாது என்றும் பவ்யூன் தொழிற்சாலை தெரிவித்துள்ளது.
பவ்யூன் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 50,000 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய சந்தைகளில் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் உடை, காலணி, மரச்சாமான்கள் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்யும் வியட்னாம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வியட்னாமில் கடந்த ஆண்டு மட்டும் 630,000க்கும் அதிகமானவர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு மனிதவள அமைச்சு தகவல் தெரிவிக்கிறது.

