ஹனோய்: புறநகர்ப் பகுதியை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக பெரிய அளவிலான ரயில் திட்டம் ஒன்றை வியட்னாம் அறிவித்துள்ளது.
தலைநகர் ஹனோயில் ஐந்து முக்கிய ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் திங்கட்கிழமை (ஜூன் 22) தொடங்கவுள்ளன.
பொதுப் போக்குவரத்தையும் புறநகர் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு வியட்னாமின் அரசாங்கம் இதனை முன்னெடுத்துள்ளது.
தலைநகரில் ஐந்து ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளன. அது அங்குள்ள பொதுப்போக்குவரத்தின் உள்கட்டமைப்பின் மேம்பாட்டையும், புறநகர் மறுவடிவமைப்பையும் குறித்த அரசாங்கத்தின் புதிய உத்திகளை உணர்த்துகின்றன.
அரசாங்க முதலீடுகளின் தொலைநோக்கம் மாறுபடுவதன் வெளிப்பாடு இது என்று ஹனோய் பெருநகர ரயில் நிர்வாக வாரியத்தின் துணை இயக்குநர் ஙூயென் பசன் இச்செயல்பாடுகள் குறித்து கருத்துரைத்தார்.
இதற்கு முன்னரும் சில ரயில் திட்டங்களை நிறைவு செய்துள்ளது அந்நாடு. இருப்பினும், குறுகிய காலக்கெடுவுடன் அதிகப் பயணிகளுடன் பல பாதைகளில் செல்லக்கூடிய அதிநவீன ஒருங்கிணைப்புப் பொதுப்போக்குவரத்து வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் வியட்னாம் தற்போது செயல்படுகிறது.
தலைநகர் ஹனோய்க்கான பெருந்திட்டம்
2021முதல் 2030ஆம் ஆண்டுக்குள் 18 புறநகர் ரயில்பாதைகளை உருவாக்க ஹனோய் விழைகிறது. அதன் மொத்த நீளம் 979 கிலோமீட்டர் என்று மதிப்பிடப்படுகிறது.
தலைநகருக்கான பெருந்திட்டப்படி, 2035ஆம் ஆண்டுக்குள் 500 கிலோமீட்டர் சுற்றளவில் ரயில்களின் வழியாகப் புறநகர் பகுதிகள் இணைக்கப்படவுள்ளன.

