டெஹ்ரான்: அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான ஆயத்த ஆட்டங்களில் பங்கேற்க ஈரானியக் காற்பந்துக் குழுவின் நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரான் காற்பந்துக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மெஹ்தி முகம்மது நபி, பொதுச் செயலாளர் ஹெதாயத் மொம்பெய்னி உள்ளிட்ட 14 அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்களுக்கு எதிரான ‘பழிவாங்கும் செயல்’ என்றும் காற்பந்துப் போட்டியில் பாகுபாடற்ற சமவாய்ப்பை அமெரிக்கா மறுக்கிறது என்றும் ஈரான் காற்பந்துக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, “ஈரானிய விளையாட்டு வீரர்களுக்கோ, அவர்களது நிர்வாகக் குழுவினருக்கோ விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விளையாட்டுடன் தொடர்பில்லாத, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படையுடன் தொடர்புடையவர்கள் குழுவில் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் அது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவுடன் நிலவும் அரசதந்திரப் பதற்றம் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து மெக்சிகோவின் டிஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது.
ஈரான் அணி தனது உலகக் கிண்ண ஆட்டங்களில் ஜூன் 15ல் நியூசிலாந்தையும், ஜூன் 21ல் பெல்ஜியத்தையும் இங்கல்வுட் நகரில் எதிர்கொள்ளவுள்ளது.

