ஒன்டாரியோ: கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் அமைந்துள்ள ‘ஒண்டர்லேண்ட்’ கேளிக்கைப் பூங்காவில் இருக்கும் ‘லம்பர் ஜேக்’ சவாரி திடீரெனப் பழுதானதால் அதில் பயணம் செய்த கேளிக்கைப் பிரியர்கள் கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்குத் தலைகீழாகத் தொங்க நேரிட்டது.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (செப்.23) நடந்தது.
இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.
உள்ளூர் நேரப்படி இரவு 10.40 மணியளவில் ‘லம்பர் ஜேக்’ சவாரி தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் கேளிக்கைப் பிரியர்கள் இரவு 11.05 மணி வரை அதில் சிக்கி இருந்ததாகவும் கூறப்பட்டது. கேளிக்கைப் பூங்கா ஞாயிற்றுக்கிழமை சிபிசி செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்டோரில் இருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களுக்குக் கேளிக்கைப் பூங்காவின் சுகாதார மையம் மருத்துவ உதவி அளித்ததாகக் கூறப்பட்டது. அவ்விருவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சவாரி ஏன் பழுதானது என்பது குறித்து கேளிக்கைப் பூங்கா நிர்வாகம் தகவல் வெளியிடவில்லை.
அந்தச் சவாரி மூடப்பட்டதாகவும் சவாரி பழுதானது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் பிபிசி நிறுவனம் திங்கட்கிழமை தகவல் வெளியிட்டது.

