பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கை முந்தைய தேர்தல்களைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11ஆம் தேதியும் நெகிரி செம்பிலான் தேர்தல் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெறவிருக்கின்றன.
இரண்டு மாநிலத் தேர்தல்களிலும் வாக்காளர் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருந்தாலும் 65 விழுக்காட்டுக்குள்தான் இருக்கும் என்றார் மலாயா பல்கலைக்கழக அரசியல் கவனிப்பாளர் முகமது தௌஃபிக் யாக்கூப்.
ஒற்றுமை அரசாங்கத்தின்மீது மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் களமாக இரண்டு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல்கள் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“பொதுத் தேர்தலைவிட மாநிலத் தேர்தல் பெரும்பாலான மக்களை ஈர்ப்பதில்லை. அவற்றின் மூலம் ஏற்படும் விளைவுகள் குறைவு என்று பல வாக்காளர்கள் கருதுகின்றனர்,” என்றார் திரு தௌஃபிக்.
எனினும், உன்டி18, தானியக்க வாக்காளர் பதிவு போன்ற திட்டங்களின் அறிமுகத்தால் இளம் வாக்காளர்கள் இம்முறை அதிகம் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலும் பிற இடங்களிலும் வேலைசெய்யும் மலேசியர்கள் சொந்த தொகுதிகளுக்குத் திரும்புவது குறித்து யோசிக்கலாம் என்றார் செயின்ஸ் மலேசியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் கவனிப்பாளர் சிவமுருகன் பாண்டியன்.

