சோல்: தென்கொரியாவில் நெகிழி, வைனைல் (vinyl) பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால், உலக அளவில் நெப்தா (Naphtha) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதே அதற்கு முக்கியக் காரணமாகும்.
இதனால், தென்கொரிய மக்கள் முன்னெச்சரிக்கையாக நெகிழியால் தயாரிக்கப்பட்ட நகராட்சி குப்பை சேகரிப்புப் பைகளை அதிகளவில் வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.
கொரியா நெகிழித் தொழில்முறை கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 37 நிறுவனங்களில் 71 விழுக்காட்டினர் நெகிழித் தயாரிப்புக்கான மூலப்பொருள்களின் வரத்து குறையலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்ற அறிவிப்பை பெட்ரோகெமிக்கல் விநியோகிப்பாளர்களிடமிருந்து பெற்றுள்ளன.
மேலும், மூலப்பொருள்களின் விலை உயர்வு குறித்து தெரிவிக்கப்பட்டதாகக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 92 விழுக்காடு நிறுவனங்கள் கூறியதாக அந்தக் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) குறிப்பிட்டது.
தனது மொத்த நெப்தா தேவையில் 40 முதல் 45 விழுக்காடு இறக்குமதியை நம்பியே தென்கொரியா உள்ளது. தற்போது விநியோகம் தடைப்பட்டுள்ளதால் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, தென்கொரியாவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் நெப்தாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தென்கொரிய அரசாங்கம் மார்ச் 24ஆம் தேதி தெரிவித்தது.

