பெட்டாலிங் ஜெயா: திரெங்கானுவின் கெமாமன் பகுதியில் உள்ள ‘ஆயர் புத்தே’ நீர்வீழ்ச்சியில் கூடியிருந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பத்து பேரில் ஒருவரின் சடலத்தை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிராமவாசிகள் அந்தச் சடலத்தை செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணி அளவில் கண்டதாக திரெங்கானு தீயணைப்புத் துறையின் இரண்டாம் பிரிவுத் தலைவர் அஸ்மான் அலியாஸ் கூறினார்.
அது சம்பவ இடத்திற்கு 12 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சடலம் ஆற்றிலிருந்து காலை 8.15 மணி அளவில் மீட்கப்பட்டதாகவும் அது ‘ஆயர் புத்தே’ காவல்துறை நடவடிக்கை கட்டுப்பாட்டு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாண்டவர் 18 வயது புத்ரி பல்கிஸ் இஸ்ஸாட்டி அப்துல் ரஹ்மான் என்பதை அவருக்கு நெருங்கிய உறவினர் உறுதிப்படுத்தினார்.
மேலும் மூவரைக் காணவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நீர்வீழ்ச்சியில் உல்லாசமாகக் கூடியிருந்தபோது திடீரென பீறிட்டு எழுந்த நீரில் பத்து பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் பாஹாங்கிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.


