ஈரானின் ஆக மூத்த ராணுவத் தளபதியைக் கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஈரானின் ஆக மூத்த ராணுவத் தளபதியைக் கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

1 mins read
df414cf7-766c-47ee-80e5-33689c180cb9
ஈரானின் உச்சமன்றத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட தேதி குறிப்பிடப்படாத படத்தில் மேஜர்-ஜெனரல் அலி ஷட்மானி. - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஜெருசலம்: புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி ஒருவரை தான் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தெரிவித்தது.

ஜூன் 13ஆம் தேதி ஈரான்மீது குண்டு வீசத் தொடங்கிய இஸ்ரேல், குறைந்தது 11 மூத்த ராணுவ அதிகாரிகளைக் கொன்றுள்ளது.

அந்த வரிசையில் மேஜர்-ஜெனரல் அலி ஷட்மானியை தான் கொன்றுவிட்டதாக செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் கூறியது. ஈரானில் ஆக மூத்த ராணுவத் தளபதி என அவரை இஸ்ரேல் வர்ணித்தது. முதல் நாள் போரில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு தினங்களுக்கு முன்புதான் ஷட்மானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

மேஜர்-ஜெனரல் ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக கருத்து எதுவும் வெளிவரவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானின் நலிவுற்றுவரும் ராணுவத் தலைமைத்துவத்துக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

திரு ஷட்மானியின் கொலை, ஈரானின் உளவுத்துறைக்குள் ஊடுருவ இஸ்ரேலின் நீண்டகால முயற்சியை வெளிப்படுத்துவதாக மூத்த இஸ்ரேலியத் தற்காப்பு அதிகாரி ஒருவர் சொன்னார்.

இந்நிலையில், இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை ஈரான்மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதாக இஸ்ரேலிய ராணுவத்தின் தலைமைப் பேச்சாளர் பிரிகேடியர்-ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்இஸ்ரேல்போர்