அதிபர் அதிகாரத்தின்கீழ் உக்ரேனுக்கு ஆயுதங்கள்: டிரம்ப்

2 mins read
a1fc4357-75b9-4ac9-8212-f0ec19f94ab8
அதிபர் அதிகாரத்தின்கீழ் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப (வலது) அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிபருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பவிருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் பதவிக்குத் திரும்பிய திரு டிரம்ப் முதல் முறையாக அவ்வாறு செய்கிறார்.

ர‌ஷ்யா, அண்டை நாடான உக்ரேன்மீது படையெடுத்து மூவாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், திரு டிரம்ப் நிர்வாகம் அதிபருக்கு அதிகாரத்தின்கீழ் அமெரிக்காவின் கிடங்கிலிருந்து எந்த ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்புவது என்பதை அடையாளம் காண்பதாகக் கூறப்படுகிறது. அது கிட்டத்தட்ட $30 மில்லியன் டாலராக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.

வலுப்பெற்றுவரும் ர‌ஷ்யத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவி செய்யும் வகையில் கூடுதல் ஆயுதங்களை அனுப்பி வைக்கப்போவதாகத் திரு டிரம்ப் ஜூலை 7ஆம் தேதி கூறினார்.

ஆனால் சரியாக எந்தெந்த ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தகவல் அறிந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அது இடம்பெறும் என்றார்.

இதுவரை முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கிய ஆயுதங்களை மட்டுமே டிரம்ப் நிர்வாகம் உக்ரேனுக்கு அனுப்பியது.

அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களை அவசர காலத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு அனுப்ப அதிபருக்கு அதிகாரம் அனுமதிக்கிறது.

எனினும் உக்ரேனைத் தற்காக்க திரு டிரம்ப் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

உக்ரேனுக்கான $3.8 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் அதிபருக்கு இருக்கும் அதிகாரத்தில் எஞ்சியுள்ளன.

இதற்குமுன் ஜனவரி 9ஆம் தேதி திரு பைடன் $500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்ப ஒப்புதல் அளித்தார்.

திரு பைடன் ஒப்புதல் வழங்கிய சில முக்கிய ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பாமல் டிரம்ப் நிர்வாகம் இந்த மாதம் நிறுத்திவைத்திருந்தது. அவை பின் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்க நாடாளுமன்றம் $175 பில்லியன் மதிப்பிலான நிவாரண, ராணுவ உதவித் திட்டங்களை உக்ரேனுக்கு ஒதுக்க இதற்குமுன் ஒப்புதல் அளித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்