இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் முடிசூட்டு விழா மே 5 ஆம் தேதி லண்டனில் நடந்தது.
70 ஆண்டுகளுக்கு முன்னர் எலிசபெத் ராணி முடிசூடினார், அதன் பிறகு இப்போது தான் முடிசூடும் விழா நடைபெற்றது.
விழாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் சார்பில் அந்நாட்டு துணை அதிபர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டார்.
நடிகை சோனம் கபூர் கலந்துகொண்டதாக ‘வெரைட்டி’ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மும்பை நகரில் இருந்து டப்பாவாலா என அழைக்கப்படும் உணவு பொட்டலம் விநியோகிக்கும் இரு சமானியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அரசருக்கு சால்வை ஒன்றையும் பரிசாகத் தந்ததாக எஎன்ஐ குறிப்பிட்டது.
அரசர் சார்ல்ஸின் தொண்டூழியத்திற்கு உதவும் அல்லது வேலை செய்து வரும் சில இந்தியர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சவ்ரப் பாக்டே என்னும் 37 வயது கட்டட வடிவமைப்பாளரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் அரசரின் உபகாரச் சம்பளத்தில் படித்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியில் வந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்சதா மூர்த்தியும் விருந்தினர் பட்டியலில் இருந்தனர்.