நியூயார்க்: டக்கேடா மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த டெங்கிக்கான தடுப்பூசிக்கு உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் டெங்கி காய்ச்சலுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அண்மை காலமாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் டெங்கி காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் டெங்கி பதிவாகாத இடங்களிலும் டெங்கி பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
2023ஆம் ஆண்டு மட்டும் 5 மில்லியன் பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 5,000க்கும் அதிகமானோர் மாண்டதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.
டெங்கி தடுப்பூசி மூன்று மாத இடைவெளிகளில் இரண்டு முறை போடப்படும். அதிக அளவில் பாதிப்புள்ள பகுதிகளில் 6 முதல் 16 வயது உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை போட உலகச் சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

